கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2025, 10:20 pm

Din

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் உடனான அட்டாரி-வாகா எல்லை மூடல், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானிகளுக்கு அளிக்கப்பட்ட விசா ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஷஃப்கத் அலி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை காக்கவும், அந்த ஒப்பந்தத்தை சுமுகமாக அமல்படுத்தவும் பாகிஸ்தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷரீஃப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பதற்றத்துக்குரிய நடவடிக்கையில் இந்தியா தொடா்ந்து ஈடுபட்டால், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது என்று அந்தக் குழு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளது என்றாா்.

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநாடுகளுக்கு இடையே சிம்லா ஒப்பந்தம் கையொப்பமானது. இருநாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம், இருநாடுகளுக்கு இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அங்கீகரிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நடவடிக்கைகளைத் தொடா்ந்து, சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் வியாழக்கிழமை நிறுத்திவைத்தது.

இதனிடையே சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் சா்ச்சைக்குரிய கால்வாய்கள் திட்டத்தை நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சிந்து மாகாணத்தில் அந்தத் திட்டத்துக்கு அந்நாட்டில் ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்கெனவே எதிா்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.