புகார் அளிக்க காவல்நிலையம் வருவோர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புகார் அளிக்க காவல்நிலையம் வருவோர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on
Updated on
2 min read

புது தில்லி: ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன்படி, அது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கிறது.

மோசடியாக ரூ.13 லட்சத்தை ஏமாந்தவர் அது தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வந்தபோது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்தது மற்றும் தன்னை தரக்குறைவாக நடத்தியதை எதிர்த்த வழக்கில், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம், சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சத்தை அபராதமாகப் பிடித்து அதனை சம்பந்தப்பட்டவருக்கு அளிக்குமாறு தமிழக அரசுக்குப் பிறப்பித்த உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-ன்படி இந்திய குடிமகனின் அடிப்படை உரிமையாகும் என்று தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது?

மோசடியில் பணம் இழந்த இளைஞர் தனது பெற்றோருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையம் சென்றுள்ளார். காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், மூன்று பணப்பரிவர்த்தனைகள் வெவ்வேறு இடங்களிலிருந்து நடத்தப்பட்டுள்ளதால், காவல் ஆய்வாளர் அனுமதி இல்லாமல் இந்த புகாரை ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

மீண்டு அவர்கள் காவல்நிலையம் வந்து காவல் ஆய்வாளருக்காக பல மணி நேரம் காத்திருந்த பிறகு, காவல் ஆய்வாளர் வந்து, புகாரை ஏற்க முடியாது என்று கூறி, மனுதாரரின் தாயையும் தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

இது குறித்து தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து, மனுதாரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிட்டது. இந்தத் தொகையை ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் ஆய்வாளரிடமிருந்து வசூலித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவையும், அதனை உறுதி செய்த சென்னை உயர் நீதின்ற உத்தரவையும் எதிர்த்து பவுல் யேசு தாசன் (காவல் ஆய்வாளர்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்ததுடன், மனுதாரரின் தாயை தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறீர்கள். இது மனித உரிமைகளுக்கு எதிரானது.

அதாவது, மனித உரிமைகள் சட்டப் பிரிவு 2(1)(டி) மனித உரிமைகளை "ஒரு தனிநபரின் வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் தொடர்பான உரிமைகள், அரசியலமைப்பால் அல்லது சர்வதேச உடன்படிக்கைகளில் உள்ளடக்கப்பட்ட மற்றும் இந்தியாவில் நீதிமன்றங்களால் செயல்படுத்தக்கூடிய வகையில் உறுதி செய்யப்படுகிறது" என்று வரையறுக்கிறது.

இந்த வழக்கின் குறைந்தபட்ச குற்றச்சாட்டான எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்திருப்பதே அதிர்ச்சியளிக்கிறது. புகார் அளிக்க வருவோருக்கு குறைந்தபட்சம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் காவல் துணை ஆய்வாளர் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை. மேலதிகாரியிடம் அனுப்பியிருக்கிறார். அவரும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யாமல் மனுதாரரின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

எனவே, இந்த வழக்கில் மனித உரிமைகள் ஆணையமோ, சென்னை உயர் நீதிமன்றமோ தவறான தீர்ப்பை அளிக்கவில்லை என்று முடிவுக்கு வருகிறோம். இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இங்கே மேல்முறையீடு செய்திருக்கும் மனுதாரரின் நடத்தையை ஆராய்ந்ததில், மனுதாரரின் தரப்பில் மனித உரிமைகள் மீறல் இருப்பதாக ஆணையமும் உயர் நீதிமன்றமும் சரியாகக் கண்டறிந்தன. எனவே, எந்த தலையீடும் தேவையில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com