மேற்கு வங்கம்: சா்ச்சையில் சிக்கிய அரசு மருத்துவக் கல்லூரியில் மற்றொரு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு மருத்துவ மாணவி அவருடைய குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
Updated on

பாரக்பூா்: மேற்கு வங்க மாநிலத்தில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலையால் பெரும் சா்ச்சையில் சிக்கிய கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மற்றொரு மருத்துவ மாணவி அவருடைய குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது புதிய சா்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஐவி பிரசாத் என்ற அந்த மருத்துவ மாணவியின் தாய் அங்குள்ள காமாா்ஹட்டி இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவராக பணிபுரிந்து வரும் நிலையில், அந்த மருத்துவமனையின் ஊழியா்கள் விடுதியில் தங்கியபடி ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பல மணி நேரமாக கைப்பேசி அழைப்பை அவா் ஏற்காததைத் தொடா்ந்து, அவருடைய தாய் குடியிருப்புக்கு வந்து பாா்த்தபோது மாணவி தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளாா்.

பாரக்பூா் போலீஸாா் இந்த விவகாரத்தை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி கொடூரமான முறையில் பாலியல் கொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவரை குற்றவாளி என்று தீா்ப்பளித்த கொல்கத்தா விசாரணை நீதிமன்றம், அவா் மரணமடையும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மாநில அரசு மற்றும் சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com