/

சாகும்வரை சிறை போதாது! மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் மமதா அதிருப்தி

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மமதா அதிருப்தி.

News image

மமதா பானர்ஜி - கோப்புப் படம்

Updated On :20 ஜனவரி 2025, 5:29 pm IST

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திருப்திகரமானதாக இல்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கான தண்டனை விவரம் இன்று (ஜன. 20) வெளியானது.

இதில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராயை சாகும் வரை சிறையில் அடைக்க கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது.

வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் சாகும்வரை சிறை தண்டனை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்திகரமானதாக இல்லை என முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து மமதா மேலும் பேசியதாவது,

''மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கின் தீர்ப்பை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டேன். மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்கள் தொடர் கோரிக்கை. அதில் நிலையாக இருந்தோம்.

எனினும் இது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு. இது குறித்து மேலும் என்னால் பேச முடியாது. இதுபோன்ற மற்ற 3 பாலியல் வழக்குகளில் 54 - 60 நாள்களில் விசாரணையை முடித்து மாநில காவல் துறை மரண தண்டனையை உறுதி செய்திருந்தது. இது மிகவும் தீவிரமான வழக்கு. இந்த வழக்கு எங்கள் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால், முன்பே மரண தண்டனையை உறுதி செய்திருப்போம்.

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதில் தீர்ப்பை உறுதி செய்ய சிபிஐக்கு 5 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது.

தேவைப்படும்போது மாநில காவல் துறைக்கு இந்த வழக்கு மாற்றப்படும் எனக் கூறப்பட்டிருந்தாலும், முழுவதுமாக எங்களிடம் இருந்து இந்த வழக்கு அவர்களாலேயே கையாளப்பட்டது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்கள் முதன்மை நோக்கமாக இருந்தது. இந்தத் தீர்ப்பில் எங்களுக்குத் திருப்தி இல்லை'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.