
வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்க தேசிய மாணவர் படையினர் முக்கியப் பங்களிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் என்சிசி அமைப்பின் குடியரசு தின முகாம் ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. தில் நாடு முழுவதிலும் இருந்து 2,361 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 27-ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியுடன் இந்த முகாம் நிறைவடையும்.
இந்நிலையில், என்சிசி முகாமில் திங்கள்கிழமை பங்கேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: என்சிசி முகாமில் மாணவர்கள் காட்டிவரும் ஒற்றுமையும் ஒழுக்கமும் பாராட்டத்தக்கவை. இந்தியர் பலராயினும் ஆன்மா ஒன்றுதான்; பல்வேறு கிளைகள் இருந்தாலும் வேர் ஒன்றுதான்; பல்வேறு ஒளிக் கதிர்கள் இருந்தாலும் வெளிச்சம் ஒன்றுதான்.
நான் அரசியலுக்கு வருவதற்குமுன் மாணவராகவும் என்சிசி உறுப்பினராகவும் இயற்பியல் ஆசிரியராகவும் இருந்தேன்.
என்சிசி மாணவர்கள் காட்டி வரும் ஆர்வமானது இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு என்பதைக் காட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, என்சிசி அமைப்பின் முன்னாள் உறுப்பினராவார். வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற கனவை அவர் கொண்டுள்ளார். அவரது கனவை நனவாக்குவதற்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு என்சிசி மாணவர்களுக்கு உள்ளது.
வளர்ந்த நாடு என்ற கனவு வெறுமனே நிலத்தின் மீதான வளர்ச்சி அல்ல: அது ஒட்டுமொத்த சமூகமும் வளர்வதைக் குறிப்பதாகும். தனது உறுப்பினர்கள் இளவயதில் இருக்கும்போது அவர்களுக்கு ஒழுக்கத்தையும் தலைமைப் பண்புகளையும் என்சிசி அளிக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.