
பட்ஜெட்டில் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கவுள்ளோம் என்று தெலங்கானா துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமர்கா தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ’கல்விச் சிந்தனை அரங்கு 2025’ இறுதிநாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஜன. 28) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தெலங்கானா துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமர்கா, ’தெலங்கானாவின் எதிர்கால கட்டமைப்பு மற்றும் கல்வி’ குறித்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
“ஒருவருக்கு 100 சதுர அடி வீடுகூட இல்லை. மற்றொருவருக்கு ஒரு லட்சம் சதுர அடியில் வீடு உள்ளது. மாநிலத்தின் அதிகபட்ச மக்களுக்கு வளங்களை பகிர்ந்தளிக்கும் வகையில் வளர்ச்சியடைவதே எங்கள் நோக்கம்.
மாநிலத்தில் யாரும் வீடு இல்லாமல் வாழக்கூடாது. எந்தக் குழந்தைக்கும் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படக்கூடாது. எந்த இளைஞரும் வேலையில்லாமல் இருக்கக்கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இதைத் தெளிவுபடுத்தினோம்.
எதிர்காலத்தில் சிறந்த மனித வளத்தை கல்வியே உருவாக்கும் வகையில், அதிக பட்ஜெட்டை கல்வியில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.
இந்த ஆண்டு 60 உறைவிடப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் சிறந்த கல்வி பெறுவதை உறுதி செய்வோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 11,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமித்துள்ளோம்.
நாங்கள் ஜனநாயகம், அரசியலமைப்பு மீது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். மத்திய அரசுடன் ஆரோக்கியமான உறவையே நாங்கள் விரும்புகிறோம். அரசியல் வேறுபாடுகள் இருக்கும், எங்கள் சித்தாந்தங்களை வெளிப்படுத்த எங்களுக்கு அனுமதி உண்டு” என்றார்.