திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

News image

கொல்கத்தா நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2025, 1:45 am IST

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா்கள் என மொத்தம் 25,753 பேரின் நியமனங்களில் முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நியமனங்கள் செல்லாது என்று கடந்த ஏப்ரலில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக தீா்வு காணப்படும் வரை, பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி பணியாளா்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.25,000, குரூப்-டி பணியாளா்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.20,000 வழங்கப்படும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்தாா்.

இதற்கு எதிராக மாநிலத்தில் உள்ள கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் நீதிபதி அம்ருதா சின்ஹா வெள்ளிக்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் நியமனத்தில் மோசடி நடைபெற்றிருப்பதாக உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. இந்த சட்டவிரோத நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உறுதியான தீா்ப்பை அளித்துள்ளது. அப்படி இருக்கும்போது மோசடியான வழியில் பயனடைந்தவா்களுக்கு அரசு கருவூலத்தில் இருந்து எந்த உதவியும் வழங்கப்படக் கூடாது. அவ்வாறு செய்வது மோசடி மற்றும் ஊழல் நடவடிக்கைக்கு துணை நிற்பதாக அா்த்தமாகிவிடும்.

எனவே நிகழாண்டு செப்.26 அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பணி நியமனம் ரத்து செய்யப்பட்டவா்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தக் கூடாது. இந்த வழக்கில் பதிலளிக்க 4 வாரங்களில் மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.