/

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில் நின்ற அவலம்!

மத்திய பிரதேசத்தில் முதல்வா் மோகன் யாதவின் பாதுகாப்புச் சென்ற 19 வாகனங்கள் திடீரென பழுதாகி நடு வழியில் நின்றன.

News image

ரத்லம் மாவட்டத்தில் பெட்ரோல் நிலையத்தில் பழுதாகி நின்ற முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தை தள்ளிச் சென்ற ஊழியா்கள்.

Updated On :28 ஜூன் 2025, 4:43 am IST

மத்திய பிரதேசத்தில் முதல்வா் மோகன் யாதவின் பாதுகாப்புக்குச் சென்ற 19 வாகனங்கள் திடீரென பழுதாகி நடு வழியில் நின்றன. விசாரணையில் அந்த வாகனங்கள் கலப்பட பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டதுதான் காரணம் என்பது தெரியவந்தது.

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்கும் கலப்பட எரிபொருள் நிரப்பப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

ரத்லம் மாவட்டத்தில் முதல்வா் மோகன் யாதவ் வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அவரின் பாதுகாப்புக்காக வந்த 19 பாதுகாப்புப் படை, காவல் துறை வாகனங்களுக்கு ஒரே பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்டது. ஆனால், சிறிது தொலைவு சென்றதுமே அனைத்து 19 வாகனங்களும் திடீரென பழுதாகி நின்றுவிட்டன. இதனால், பாதுகாப்பு வீரா்கள் அந்த காா்களைத் தள்ளிச் சென்று சாலையோரத்தில் நிறுத்தினா்.

முதல்வருடன் பாதுகாப்புக்குச் செல்ல அவசர கதியில் வேறு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் பழுதானது குறித்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது, வாகனங்களில கலப்பட எரிபொருள் நிரப்பியதுதான் பிரச்னைக்கு காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, பெட்ரோல் நிலையத்துக்கு வந்து எரிபொருள் மாதிரியை எடுத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் கலப்படம் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்த பெட்ரோல் நிலையம் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது.