/

சிவசேனை எம்.பி.யின் ஓட்டுநருக்கு பரிசாக ரூ. 150 கோடி நிலம்!

மகாராஷ்டிரத்தில் எம்.பி.யிடம் ஓட்டுநராகப் பணிபுரிபவருக்கு அரச குடும்பத்தினர் 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கினர்.

News image

சிவசேனை எம்.பி. சந்திபன் பூம்ரே - கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2025, 5:05 am

மகாராஷ்டிரத்தில் சிவசேனை எம்.பி.யிடம் ஓட்டுநராகப் பணிபுரிபவருக்கு அரச குடும்பத்தினர் 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கினர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சத்ரபதி சம்பாஜி நகரில் ஹைதராபாத் அரச குடும்பத்தின் சந்ததியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நிஜாம் சகாப்தத்தில் பிரதமராக இருந்தவர்களின் சந்ததியினரான மீர் மஹ்மூத் அலி மஜார் அலிகான் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து, ஓட்டுநர் ஒருவருக்கு ரூ. 150 கோடி மதிப்புடைய நிலத்தை பரிசாக வழங்கியுள்ளனர்.

சிவசேனை எம்.பி. சந்திபன் பூம்ரே மற்றும் அவரது மகனும் எம்.எல்.ஏ.வுமான விலாஸ் பூம்ரே ஆகிய இருவரிடமும் 13 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணிபுரியும் ஜாவேத் ரசூல் ஷேக் என்பவருக்கு 3 ஏக்கர் நிலத்தை ஹிபனாமா (பரிசு பத்திரம்) மூலம் பரிசாக வழங்கியுள்ளனர்.

இந்த பரிசு வழங்கப்பட்ட நிகழ்வு குறித்து எம்.பி. சந்திபனிடம் கூறுகையில், இது ரசூலின் தனிப்பட்ட விஷயம் என்று தெரிவித்தார்.

ஆனால், பரிசாக வழங்கப்பட்ட நிலத்தின் மீது நீண்டகாலமாக சட்டப் போர் நீடித்து வந்த நிலையில், 2022-ல் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், பெரும் போராட்டத்துக்கு மத்தியில் கிடைத்த நிலத்தை பரிசாக வழங்கியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனையடுத்து, அலிகான் குடும்பத்தினருடன் ரசூலுக்கு நீண்டகாலமாகவே நெருங்கிய பழக்கம் இருந்ததால்தான், பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இருப்பினும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஹிபனாமா என்பது பொதுவாக ரத்த சொந்தங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், ரசூலும் அரச குடும்பத்தினரும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.