
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,
''எனது கணவரும் பாதுகாப்புப் படையில் இருந்தார். அப்பாவி மக்களைக் காப்பதற்கும், அமைதியை நிலைநாட்டவும் அவர் விரும்பினார். வெறுப்புணர்வும், பயங்கரவாதமும் நாட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு பணியாற்றினார். அந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால், இத்துடன் இதனை முடித்துக்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கையையும் அரசுக்கு முன்வைக்கிறேன். நாட்டில் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டும் ஆரம்பமாக ஆபரேஷன் சிந்தூர் இருக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காம் சுற்றுலாத் தளத்தின் பைசாரன் பள்ளத்தாக்கில் ஏப். 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 13 நாள்கள் கழித்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை (மே 6) நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளவாடங்கள் என 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் சகோதரி உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவத்தின் இந்த பதிலடி தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலில் கணவனைப் பறிகொடுத்து சிந்தூரத்தை (குங்குமம்) இழந்த பெண்களுக்கு நீதி பெற்றுத்தரும் நோக்கத்தில் ராணுவத்தின் தாக்குதல் முயற்சிக்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!