
பாகிஸ்தானின் ஏவுகணை, டிரோன்கள் நடுவானில் தாக்கி அழிக்கப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி விளக்கமளித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்ற பெயரில், இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளும் சரிமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில், புதன்கிழமை அதிகாலையில் 9 பயங்கரவாத முகாம்கள் அழித்து ஒழிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி பேசுகையில், “ஸ்ரீநகர், லூதியானா, பூஜ், ஜம்மு உள்ளிட்ட இடங்களை நோக்கி டிரோன்கள், ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்தியா ராணுவ நிலைகளை பாகிஸ்தான் தாக்க முயன்றது.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 அப்பாவிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, அடம்பூர், பதிண்டா, சண்டீகர், நல், பலோடி, உத்தரலை மற்றும் பூஜ் உள்பட வடக்கு - மேற்கு இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க முயற்சித்தது. இந்த நிலையில், ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் நடுவானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டன” என்றார்.