பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி

செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பேசியதைப் பற்றி..
வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி..
வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி..
Published on
Updated on
2 min read

பாகிஸ்தானுக்கு சரியான நேரத்தில் இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தியது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோஃபியா குரேஷி ஆகியோருடன் இணைந்து விளக்கமளித்தார்.

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தை ட்ரோன்களையும் அழித்தொழித்தது. பாகிஸ்தான் ட்ரோன்கள் ஜம்மு-காஷ்மீரில் தாக்கியதில் ஒரு குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் புதுதில்லியில் இன்று காலை 10.50 மணியளவில் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், “பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் இந்தியா மீது தாக்குதல் நடத்தி இந்தியாவின் சீண்டி வருகிறது. இன்று காலையும் தாக்குதல் நடத்தியதே அதற்கு ஒரு உதாரணம். பாகிஸ்தானின் தூண்டுதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

வடக்கே பாரமுல்லாவில் இருந்து தெற்கே பூஞ்ச் வரையில் 26 இடங்களில் பாகிஸ்தான் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டது. சூரத்கர், ஆதம்பூரில் தாக்குதல் நடத்தப்பட்டு, இந்திய ஏவுகணை அமைப்பான எஸ்-400 சுதர்சன சக்ரா சேதமடைந்தது என்பது முற்றிலும் பொய்யான தகவல். மக்கள் வாழும் வசிப்பிடங்கள், குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. ஜம்மு-காஷ்மீரில் அரசு அதிகாரி பாகிஸ்தானின் தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்திருக்கிறார்.

இந்திய ஏவுகணை ஆப்கானிஸ்தானைத் தாக்கியதாகவும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. எந்த நாடு ஆப்கானிஸ்தான் மக்களைத் தாக்கும் என்பதை அவர்களுக்கு கூற வேண்டிய அவசியம் இருக்காது.

இந்திய மக்கள் இந்திய அரசை விமர்சித்திருப்பதைப் பற்றி பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக சில பதிவுகளைப் பார்த்தோம். சொந்த நாட்டு மக்கள், அந்நாட்டின் அரசை விமர்சிப்பது பாகிஸ்தானுக்கு புதியதாக இருக்கலாம். ஆனால், அது ஒரு சிறந்த ஜனநாயகத்துக்கான அடையாளம்.

பாகிஸ்தானில் இருந்து வரும் சிவில் விமானங்களுக்குப் பின்னால் ஒழிந்துகொள்கின்றனர். சியால்கோட்டில் உள்ள ராணுவ தளம் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம் தரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம். சீர்சா விமானப் படைத் தளம் தாக்கப்பட்டது என்பது முற்றிலும் பொய்யான தகவல்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com