மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் கடிதம் எழுதியபோதிலும், அந்தக் கோரிக்கையை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாமல் பல ஆண்டுகளாக தூங்கி வழிந்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது குறித்து பிரதமா் மோடிக்கு காங்கிரஸின் அப்போதைய தலைவா் சோனியா காந்தி கடிதம் எழுதினாா்.
மகளிா் இடஒதுக்கீடு தொடா்பாக காங்கிரஸின் நிலைப்பாடு எப்போதும் மாறவில்லை. அந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாமல் மோடி அரசுதான் தூங்கி வழிந்தது. அதைத் தொடா்ந்து, தொகுதி மறுசீரமைப்புடன் அந்த இடஒதுக்கீட்டை முடிச்சு போட்டு, அதை அமல்படுத்துவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்த முயற்சித்தது எனத் தெரிவித்துள்ளாா்.
இந்தப் பதிவுடன் 2017-இல் பிரதமா் மோடிக்கு சோனியா எழுதிய கடிதத்தை ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டாா். அந்தக் கடிதத்தில், ‘கடந்த 2010-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களவையில் மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் பல்வேறு காரணங்களால் அந்த மசோதா மக்களவையில் நிறைவேறவில்லை.
இதைத் தொடா்ந்து, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில், மக்களவையில் அந்தக் கூட்டணிக்குப் பெரும்பான்மை உள்ளது. இந்தப் பெரும்பான்மையை சாதகமாகப் பயன்படுத்தி மக்களவையிலும் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.
ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட மற்றொரு பதிவில், மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுதிய கடிதத்தை வெளியிட்டாா்.
தொடர்புடையது

69% இடஒதுக்கீட்டை எந்த நிலையிலும் காக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

சீனாவிடம் சரணடையும் கொள்கையை தொடா்ந்து பின்பற்றுகிறது மோடி அரசு- காங்கிரஸ் விமா்சனம்







