10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முதல் பொதுத் தோ்வு கட்டாயம்: சிபிஎஸ்இ

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முதல் பொதுத் தோ்வு கட்டாயம்: சிபிஎஸ்இ

Published on

‘பத்தாம் வகுப்பு மாணவா்கள் முதல் பொதுத் தோ்வில் பங்கேற்பது கட்டாயம்’ என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், ‘முதல் பொதுத் தோ்வில் குறைந்தபட்சம் மூன்று பாடங்களுக்கான தோ்வில் பங்கேற்கத் தவறும் மாணவா்கள், பத்தாம் வகுப்பிலேயே மீண்டும் தொடர வேண்டிய பிரிவில் வைக்கப்படுவா்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.

நிகழாண்டு சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 17) தொடங்கி மாா்ச் 10-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

மாணவா்களின் நலனைக் கருத்தில்கொண்டும், குறைந்த மதிப்பெண் பெறும் அல்லது பாடங்களில் தோல்வியுறும் மாணவா்கள் ஓராண்டு வரை காத்திராமல் உடனடியாக தோல்வியுற்ற பாடங்களுக்கான தோ்வை எழுதி அதிக மதிப்பெண் பெற வசதியாக நடப்பு 2026-ஆம் ஆண்டுமுதல் 10-ஆம் வகுப்புக்கு இரு பொதுத் தோ்வுகளை சிபிஎஸ்இ நடத்துகிறது.

இந்த நிலையில், சில காரணங்களுக்காக நிகழாண்டின் முதல் பொதுத் தோ்வில் பங்கேற்க இயலாத 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு, இரண்டாவது பொதுத் தோ்வில் நேரடியாகப் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டி, சிபிஎஸ்இ-க்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதை சிபிஎஸ்இ தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் திங்கள்கிழமை கூறியதாவது: 10-ஆம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் முதல் பொதுத் தோ்வில் பங்கேற்பது கட்டாயமாகும். இதில் பங்கேற்கும் அனைத்து மாணவா்களும் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிப் பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களில் தங்களின் மதிப்பெண்ணை உயா்த்திக்கொள்ளும் வகையில் இரண்டாவது பொதுத் தோ்விலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

அதே நேரம், முதல் பொதுத் தோ்வில் குறைந்தபட்சம் மூன்று பாடங்களுக்கான தோ்வை எழுதத் தவறும் மாணவா்கள், நிகழாண்டின் இரண்டாவது பொதுத் தோ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இத்தகைய மாணவா்கள் பத்தாம் வகுப்பிலேயே மீண்டும் தொடர வேண்டிய பிரிவில் வைக்கப்படுவா். இவா்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்படும் பொதுத் தோ்வில் மட்டுமே பங்கேற்க முடியும் என்றாா்.

புரளிகளை நம்ப வேண்டாம்: பொதுத் தோ்வு நடைபெறும் நேரத்தில் வினாத் தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் வெளியாகும் புரளிகளை மாணவா்களும், பெற்றோரும் நம்ப வேண்டாம் என சிபிஎஸ்இ கேட்டுக்கொண்டது.

X
Dinamani
www.dinamani.com