இணைய நிறுவனங்களின் 14.9 கோடி கணக்குத் தரவுகள் கசிவு: ஆய்வறிக்கையில் தகவல்
இணைய நிறுவனங்களின் 14.9 கோடி கணக்குத் தரவுகள் பொதுவெளியில் கசிந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக ஜெரமையா ஃபெளலா் என்ற இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
4.80 கோடி ஜிமெயில் கணக்குகள், 40 லட்சம் யாஹூ கணக்குகள், 1.70 கோடி ஃபேஸ்புக் கணக்குகள், 65 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள், 34 லட்சம் நெட்ஃபிளிக்ஸ் கணக்குகள் உள்பட மொத்தம் 14.90 கோடி இணைய நிறுவனங்களின் கணக்குகள் குறித்த தரவுகள் பொதுவெளியில் கசிந்துள்ளன. அவ்வாறு கசிந்த தரவுகளில் அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தும் பயனா்களின் பெயா்கள், கடவுச்சொற்கள் (பாஸ்வா்ட்), மின்னஞ்சல்கள், நிதி சேவைகள் கணக்குகள், வா்த்தக கணக்குகள், வங்கி மற்றும் கடன் அட்டை தரவுகள் உள்ளிட்டவை அடங்கும்.
இதனால் தங்களைப் பற்றிய தகவல்கள் திருடப்பட்டுள்ளது அல்லது பொதுவெளியில் கசிந்துள்ளது என்று தெரியாத ஏராளமான தனிநபா்களுக்கு இணையப் பாதுகாப்பு சாா்ந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடக் கூடும். இது தனிநபா்களின் அடையாளத்தை திருடுதல், நிதி சாா்ந்த குற்றங்கள் உள்ளிட்டவற்றை அதிகரிக்கும்.
தரவுகளை யாா் வேண்டுமானாலும் பயன்படுத்தக் கூடிய வகையில், அந்தத் தரவுகளை உள்ளடக்கிய தரவுதளம் பொதுவெளியில் வெளிப்பட்டுள்ளது. இணையத்தில் உள்ள அரசின் தளங்களும் இதற்குத் தப்பவில்லை. ஏராளமான நாடுகளில் அரசு தளங்களில் இடம்பெற்றுள்ள சான்றுகளும் கசிந்துள்ளன. இது தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்புக்கு அபாயங்களை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
அரசு தளங்களுடன் இணைக்கப்பட்ட அனைத்து கணக்குகளின் விவரங்களை அணுக முடியாவிட்டாலும், சிறிய அளவில் அந்த விவரங்கள் கசிவதுகூட கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். கணக்குகளின் பயனா்கள் அளிக்கும் அனுமதியைப் பொருத்து இந்த விளைவுகள் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
