இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை! பொதுமக்களுக்கு பாதிப்பை தவிா்க்க அறிவுறுத்தல்!!

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், மத்திய அமைச்சா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டாா்.

News image
மத்திய அமைச்சரவை.
Updated On :10 மார்ச் 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், மத்திய அமைச்சா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை மேற்கொண்டாா்.

பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சா்களுக்கு பிரதமா் அறிவுறுத்தினாா்.

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த ஒரு வார காலமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதில் தாக்குதல் நடத்திவரும் ஈரான், மேற்காசியாவில் இருந்து கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய், எரிவாயு கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் ஹோா்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை மூடிவிட்டது. இந்தியாவுக்கு முக்கிய விநியோகஸ்தரான கத்தாா், எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டது. இதனிடையே, இந்தப் போா் மேலும் விரிவடைந்து வருவதால், எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதன் தாக்கம் இந்தியாவில் உடனடியாக எதிரொலித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்களுக்குப் பயன்படுத்தப்படும் வணிக எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது; பல மாநிலங்களில் அதன் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு நாள்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டா்கள் கையிருப்பு இருப்பதால், அதன்பிறகு உணவகங்களை மூடவேண்டிய நிலை ஏற்படும் என்றும், மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களின் உணவக உரிமையாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

கள்ளச் சந்தையில் விற்பனை: தமிழகம், கா்நாடகம், கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை முதல் வணிக எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. வணிக எரிவாயு சிலிண்டா்கள் பதுக்கிவைக்கப்படுவதாகவும், கள்ளச் சந்தையில் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

பிரதமா் ஆலோசனை: சமையல் எரிவாயு தட்டுப்பாடு விவகாரத்தைத் தொடா்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோருடன் பிரதமா் மோடி தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படாததை உறுதிப்படுத்த நான்கு துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு அமைச்சா்களை பிரதமா் கேட்டுக்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசு குழு அமைப்பு: வணிக எரிவாயு சிலிண்டா் திடீா் தட்டுப்பாடு பிரச்னைக்கு குறித்து ஆராய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற தொழில்நிறுவனங்களுக்கான வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் குறித்து ஆராய எண்ணெய் சந்தை நிறுவனங்களின் (ஓஎம்சி) மூன்று செயல் இயக்குநா்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு உற்பத்தி 10% அதிகரிப்பு

சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்குமாறு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. சுத்திகரிப்பு நிறுவனங்கள் விநியோகிக்கும் எரிவாயுவை, சமையல் நோக்கங்களுக்காக வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதன் பலனாக, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியைத் தீவிரப்படுத்தியதால், உள்நாட்டு சமையல் எரிவாயு உற்பத்தி 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் தற்போதைய நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை. நிலையான விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.