/

தேர்தல் ஆணையத்திற்கு வெளியே திரிணமூல் - பாஜக தொண்டர்கள் மோதல்!

தேர்தல் ஆணையத்திற்கு வெளியே திரிணமூல் - பாஜக தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டது குறித்து...

News image

தேர்தல் ஆணையத்துக்கு வெளியே மோதலில் ஈடுபட்ட பாஜக - திரிணமூல் தொண்டர்கள், மோதலில் சேதமடைந்த வாகனங்கள்

ஏஎன்ஐ

Updated On :31 மார்ச் 2026, 1:00 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள தேர்தல் ஆணையத்திற்கு வெளியே திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரிடையே இன்று (மார்ச் 31) கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் தேர்தல் ஆணையத்திற்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. நாற்காலிகளையும் கொடிக் கம்பங்களையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொல்கத்தா நகர கூடுதல் ஆணையர் சி.பி. சிங், தேர்தல் ஆணையத்திற்கு வெளியே பாஜக - திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்குப் பிறகே பேச முடியும் எனக் குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 என இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தலையொட்டி பிரசாரப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இம்முறை ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் மமதா பானர்ஜி மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான தொகுதிகள் அதிகம் உள்ளதால் இரு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதனிடையே தேர்தல் ஆணையத்துக்கு எதிரே உள்ள சாலையிலேயே திரிணமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.