அமலாக்கத்துறை சோதனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மனநிறைவை அளித்திருக்கும் என்று கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை தெரிவித்தார்.
சிஎம்ஆர்எல் கனிமவள நிறுவனத்துடன் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் பினராயி விஜயனுக்குச் சொந்தமான கண்ணூர், திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன் பேசியதாவது:
”நீண்ட காலமாகவே எனது வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை சோதனை நடத்த விரும்பியது. இந்த சோதனை ராகுல் காந்தி போன்ற குறிப்பிட்ட சிலருக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கும் என்று நான் கருதுகிறேன். பினராயி விஜயன் வீட்டில் ஏன் சோதனை நடத்தப்படுவதில்லை, அவர் ஏன் கைது செய்யப்படுவதில்லை என்ற கேள்வியை ராகுல் காந்தி எழுப்பியிருந்தார்.
நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து திட்டமிட்ட தாக்குதல்களை பாஜக அரசு தொடுத்து வருகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் வெடித்துள்ளன. தங்களுக்கு ஆதரவளிக்காத கட்சிகள் மீது அமலாக்கத்துறை நடத்தும் அத்துமீறல்கள் தொடர வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. இவை எதுவுமே எங்களை அழித்துவிடப் போவதில்லை. நாங்கள் இதை தொடக்கமாகவே பார்க்கிறோம்.
இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் எங்களை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும் என்று எண்ணிவிடாதீர்கள். மக்களின் உணர்வுகளும், கட்சித் தோழர்களின் உணர்வுகளும் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
என்னை எதிரிகள் தாக்கத் தயாரான போதெல்லாம், எனக்குக் கிடைத்த ஒரே பலம் கட்சியின் உறுதியான ஆதரவு மட்டுமே. அந்த ஆதரவு துளியளவும் குறையவில்லை என்பதைத்தான் தோழர்கள் இன்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதுவே எங்களின் பலமாகும். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Pinarayi Vijayan on the Enforcement Directorate raids
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









