தில்லி முதல்வரைக் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்! வலுக்கும் கண்டனம்!
தில்லி முதல்வர் ரேகா குப்தாவிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர்கள் மீது போலீஸார் தாக்குதல்...

தில்லி முதல்வர் ரேகா குப்தாவிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர்கள் மீது போலீஸார் தாக்குதல்... - கோப்புப் படம் | x
தில்லி முதல்வர் ரேகா குப்தாவிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர்கள் மீது தில்லி காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதற்குப் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தில்லியில், சாகேட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றின் புதிய பிரிவு திறப்பு விழாவில் இன்று (செப். 3) முதல்வர் ரேகா குப்தா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தனியார் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர்களான ஷாஹீன் கான் மற்றும் நஃபிசா கான் ஆகியோர் முதல்வர் ரேகா குப்தாவிடம் சில கேள்விகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அங்கு பணியில் இருந்து தில்லி காவல்துறை அதிகாரிகள் சிலர் பெண் பத்திரிகையாளர்கள் இருவரையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சாகேத் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட ஷாஹீன் கான் மற்றும் நஃபிசா கான் இருவரையும் தனி அறையில் வைத்து பெண் அதிகாரிகள் உள்பட காவல் துறையினர் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தத் தாக்குதலில், காயமடைந்த பத்திரிகையாளர் ஒருவர் வேதனையுடன் செய்தி அளிக்கும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. மேலும், இந்தச் சம்பவத்துக்கு நாட்டின் பல்வேறு முக்கிய பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் பணிப்புரியும் தனியார் செய்தி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தில்லி காவல் ஆணையர் அனுராக் குமார் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, இந்தியப் பத்திரிகையாளர் சங்கம், இந்தியப் பெண் பத்திரிகையாளர் சங்கம், தில்லி பத்திரிகையாளர் சங்கம், கேரளப் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Various journalists' associations have condemned the Delhi Police for assaulting a female journalist who questioned Delhi leader Rekha Gupta.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







