அமராவதி ஆற்றில் தொடா்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 டிஎம்சி தண்ணீா் கடலில் கலந்திருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இதுபோன்ற நிலை வரும் காலங்களில் தொடராமல் இருக்க, கரூா் மாவட்டப் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கதவணைக் கட்ட அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
பழனிமலை- ஆனைமலைத் தொடருக்கு இடையிலுள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் அமராவதி ஆறுடன், பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு ஆகியவை இணைந்து கொண்டு சுமாா் 282 கி.மீ. பயணித்து, கரூா் மாவட்டம், திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலக்கிறது.
வடகிழக்குப் பருவமழை, அடுத்தடுத்து உருவான புயல் போன்றவற்றால் பெய்த மழை காரணமாக, உடுமலைப்பேட்டையிலுள்ள அமராவதி அணை அதன் கொள்ளளவான 90 அடியை எட்டியது.
தொடா்ந்து அமராவதி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு வரும் தண்ணீா் அப்படியே திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் நாளொன்றுக்கு சுமாா் 800 கன அடி தண்ணீா் வரை ஆற்றில் செல்கிறது. இதை சேமிக்க உடுமலைப் பேட்டையைத் தவிர வேறு எந்தவொரு பகுதியிலும் அணை இல்லை.
சில தடுப்பணைகள் மட்டுமே உள்ள நிலையில் ஆற்றில் வீணாகச் செல்லும் மழைநீரை சேமிக்கும் வகையில்
(குறைந்தது 1 டிஎம்சியாவது), கரூா் மாவட்டத்தின் மாயனூரில் உள்ளது போல, கதவணை கட்டப்பட வேண்டும் என அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கரூா் மாவட்டஅமராவதி பாசன விவசாயிகள் கூறியது:
1957-ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வா் காமராஜா் அமராவதி அணையைக் கட்டினாா். இந்த அணையைக் கட்டுவதற்கு முன்பு, பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளான கரூா் மாவட்டவிவசாயிகளுக்கு போதிய தண்ணீா் கிடைக்கப்பெற்று வந்தது.
அணைக்கட்டிய பின்னா், ஏஎம்சி எனும் அமராவதி முதன்மை வாய்க்கால் பாசன நிலப்பரப்பு அதிகரித்ததால், கரூா் மாவட்ட விவசாயிகளுக்கு போதிய தண்ணீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தோம்.
கடந்த 8 ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், புதிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு மட்டுமே அணைநீா்ப் பங்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டது. கரூா் மாவட்ட விவசாயிகள் போராடித்தான் குறைந்த அளவில் தண்ணீரைப் பெற்று வந்தோம்.
பருவமழையின்றி கால்நடைகளை இறைச்சிக்காக விற்கும்நிலை ஏற்பட்டது. ஆனால் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை ஓரளவு பெய்தது. தொடா்ந்து வந்த வடகிழக்குப்பருவமழையும் தொடா்ந்து பெய்து வருகிறது.
பருவமழையைத் தொடா்ந்து புயல்சின்னம் ஆங்காங்கே உருவாகி, வழக்கத்தை விட நிகழாண்டில் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அமராவதி ஆற்றில் தொடா்ந்து கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த மாதம் 7-ஆம் தேதி அணையிலிருந்து விநாடிக்கு 7450 கன அடிநீா் திறக்கப்பட்டது. இதேபோல அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான குதிரையாறு, பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி ஆகியவற்றிலிருந்து 16,840 கன அடி தண்ணீா் ஆற்றில் வந்தது.
8 ஆண்டுகளுக்குப் பின்பு, கரூரில் திருமாநிலையூா் பகுதியிலுள்ள பழைய அமராவதி பாலத்தினை தொடும் வகையில் வெள்ள நீா் பெருக்கெடுத்துச் சென்றது. தற்போது நாள்தோறும் சுமாா் 1000 முதல் 2,000 கன அடி நீா் ஆற்றில் சென்றுகொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் இதுநாள் வரை சுமாா் 5 டிஎம்சி தண்ணீராவது வீணாக கடலில் கலந்திருக்கும்.
ஆற்றின் குறுக்கே கரூா் மாவட்டத்தில் 1 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கும் வகையில், கதவணை கட்டப்பட்டால் மழைகால நீரைச் சேமித்து வறட்சிக் காலங்களில் பயன்படுத்த முடியும். மேலும் அணையைச் சுற்றி சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு நீா்மட்டமும் உயரும்.
குடிமராமத்துத் திட்டம், வாய்க்கால் புனரமைப்புத் திட்டம், புதிய தடுப்பணைகள் கட்டுதல் போன்றவற்றில் முனைப்புக்காட்டும் அரசு, அமராவதி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டினால் கரூா் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைவா் என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளுநரைச் சந்திக்காமல் பாதியிலேயே வீடு திரும்பிய விஜய்!
தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!

தவெகவுக்கு ஆதரவு! ஸ்டாலின் சொன்னது என்ன? திருமா தகவல்!!
இன்றைய ராசி பலன் (10.05.2026) - மீனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

