ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுச்சேரி பட்ஜெட்: ரூ.5,890 கோடிக்கு தாக்கல்: காங்கிரஸ், அ.தி.மு.க வெளிநடப்பு-திமுக புறக்கணிப்பு

புதுச்சேரி மாநிலத்தின் 2013-2014 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி இன்று (ஜூலை 15) தாக்கல் செய்தார். ரூ. 5,890 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2013, 10:51 am

சக்திவேல்

புதுச்சேரி மாநிலத்தின் 2013-2014 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி இன்று (ஜூலை 15) தாக்கல் செய்தார். ரூ. 5,890 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் தாக்கலின் போது, காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.புதுச்சேரி 13-ஆவது சட்டப்பேரவை நான்காவது கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜூலை 15) மதியம் 12.30 மணிக்குத் தொடங்கியது. சட்டப்பேரவைத் தலைவர் வி.சபாபதி, படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு என்ற குறளுடன் அவை நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறையைக் கவனித்து வரும் முதல்வர் ரங்கசாமி முன்னிலைப்படுத்துவார் என அறிவித்தார்.

முதல்வர் ரங்கசாமி,  அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு என்ற குறளுடன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். அவர் திருக்குறளைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் அரசுக்கு எதிராக 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். பின்னர், பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.இதைத் தொடர்ந்து, கடந்த நிதிநிலை அறிக்கையில் கூறிய திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டிய அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

திமுகவைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ-க்கள் பேரவை வளாகத்துக்கு வந்திருந்தனர். ஆனால், அவர்கள் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

அன்பழகன் ஆப்சென்ட்:

அதிமுக மாநில செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஏ.அன்பழகன் பேரவைக்கு வரவில்லை.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையில் பேரவையில் அமைதி நிலவியது. முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் உரையை முழுமையாக வாசித்து முடித்தார்.பட்ஜெட் உரை வாசித்து முடிக்கப்பட்டதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 நாள்கள் விடுமுறைக்குப் பின் வரும் 18-ஆம் தேதி பேரவை மீண்டும் கூடுகிறது. அப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

ரூ. 5,890 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்:

நடப்பு ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ரூ.5,890 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், திட்ட செலவுக்கு ரூ.2,000 கோடியும், திட்டமில்லா செலவுக்கு ரூ.3,750 கோடியும், மத்திய அரசு ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் பிற திட்டங்களுக்கு ரூ. 140 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு:

இதில், மத்திய திட்ட உதவி உள்ளிட்ட வருவாய் வரவினங்கள் ரூ. 5,013 கோடியும், மூலதன வருவாய் வரவினங்கள் ரூ.877 கோடியும் அடங்கும்.

செலவு:

நடப்பு நிதியாண்டில் வருவாய் செலவினங்ள் ரூ.4,965 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ. 925 கோடியாகவும் இருக்கும்.இந்த பட்ஜெட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) நிதிப்பற்றாக்குறை 3 சதவீதம் ஆகும். மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வரி 10.90 சதவீதம் ஆகும். வருவாய் வரவினத்துக்கு வட்டி பட்டுவாடா 10.20 சதவீதம் ஆகும்.

தனி நபர் வருமானம் உயர்வு:

2007-2008-ஆம் ஆண்டில் ரூ.74, 201 ஆக இருந்த தனி நபர் வருமானம், 2012-2013-ஆம் ஆண்டு ரூ. 1 லட்சத்து 12, 986 ஆக உயர்ந்துள்ளது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய திட்டக்குழு நிதி:

ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்ற மத்திய திட்டக்குழு கூட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான திட்ட ஒதுக்கூடு ரூ.2,000 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடலோர பேரழிவு குறைப்பு திட்டத்துக்கு ரூ.100 கோடி உள்பட மத்திய உதவி ரூ. 783 கோடியும், கடன் ரூ. 611 கோடியும், புதுச்சேரியின் சொந்த நிதியாதாரம் ரூ.606 கோடியும் முதலீட்டுக்கு நிதி ஆதாரங்களாகும்.

ரூ.5,609 கோடியாக உயரும் கடன் சுமை:

புதுச்சேரியின் கடன் சுமை நடப்பு நிதியாண்டு இறுதியில் ரூ. 5,609 கோடியாக உயரும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மார்ச் 31, 2013 வரை புதுச்சேரி அரசின் கடன் சுமை ரூ. 5,006 கோடி. இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 30.28 சதவீதம்.நடப்பு நிதியாண்டு இறுதியான வரும் 2014 மார்ச் 31 ஆம் தேதி கடன் சுமை ரூ. 5,609 கோடியாக இருக்கும். இது 2013-2014 நிதியாண்டுக்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 26.9 சதவீதமாக இருக்கும்.கடன் செலவைக் குறைக்கும் வகையில், இக்கடன் தொகை அனைத்தையும் ஒன்றாக்கி, வட்டி விகிதத்தைக் குறைக்கும் படி மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் கடன் அளவு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 28 சதவீதமாகவும், யூனியன் பிரதேசங்களுக்கு 20 சதவீதமாகவும் இருக்கலாம் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. வெளிச்சந்தையில் வாங்கும் கடன் அளவை அதிகரிக்கும் வகையில் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களைப் போலவே 28 சதவீத வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார் ரங்கசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.