/

பிளாஸ்டிக் கேன் வெடித்து 2 பேர் இறந்த வழக்கு: 2 தனிப்படைகள் அமைப்பு

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(40). இவர் வந்தவாசி நகராட்சியில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.  சவேரியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்

News image
Updated On :31 ஆகஸ்ட் 2014, 10:12 am

கணேஷ்கிரி

வந்தவாசி அருகே பிளாஸ்டிக் கேன் வெடித்து நகராட்சி ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(40). இவர் வந்தவாசி நகராட்சியில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.  சவேரியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன்(34). இவர் வந்தவாசி நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இருவரும் சனிக்கிழமை லாரியில் குப்பைகளை எடுத்துச் சென்று வந்தவாசி-செய்யாறு சாலையில் எச்சூர் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் பிளாஸ்டிக் கேன்கள் இருந்ததை பார்த்த இருவரும் லாரியை நிறுத்திவிட்டுச் சென்று அந்த கேன்களை திறந்து பார்த்துள்ளனர். அப்போது பிளாஸ்டிக் கேன்கள் வெடித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரமேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக வந்தவாசி டிஎஸ்பி மகேந்திரன், வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிளாஸ்டிக் கேன்களில் இருந்த ரசாயணத்தின் வகை, இவற்றை சாலையோரம் போட்டவர்கள் யார் என்பது குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி துப்புரவு பணியாளர்கள் அஞ்சலி

வந்தவாசி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மெழுவர்த்தி ஏந்தி அம்மையப்பட்டு, சவேரியார்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலமாக சென்று வெங்கடேசன், அர்ஜூனன் ஆகியோரது உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் நகர்மன்றத் தலைவர் எல்.அப்சர், ஆணையர் எஸ்.லட்சுமி, பொறியாளர் ஈ.மகாதேவன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் ஆகியோரும் இருவரது உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.