பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய படிவழிக்கு மாற்றாக அமைக்கப்பட்டது வின்ச் பாதை. இந்த வின்ச் பாதை பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் தற்போது 3 வின்ச் பாதைகளில் மூன்று வின்ச்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மலைக்கோயிலுக்கு செல்ல ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ரூ.5 கட்டணமாகும். கடந்த காலங்களில் இரண்டாம் எண் வின்ச்சும், மூன்றாம் எண் வின்ச்சும் முழு பராமரிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் முதலாம் எண் வின்ச் இன்று முதல் (திங்கள்கிழமை)ல பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணியின் போது வடக்கயிறு ஸ்பிளைசிங், வின்ச் பெட்டிகளை சீரமைத்தல், புதிய இருக்கைகள் அமைத்தல், மின் பராமரிப்பு பணிகள் மற்றும் பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக திருக்கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 10 நாள் முதல் 15 நாட்கள் வரை நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் எண் வின்ச் பராமரிப்பு செய்யப்பட்டாலும் பக்தர்கள் வசதிக்காக இரண்டாம் எண் மற்றும் மூன்றாம் எண் வின்ச் எப்போதும் போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.