/

மாணவி புனிதா கொலை வழக்கில் டிச. 4 ல் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், கிளாக்குளம் அருகே மாணவி புனிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்

News image
Updated On :27 நவம்பர் 2014, 2:33 pm

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம், கிளாக்குளம் அருகே மாணவி புனிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கிளாக்குளத்தைச் சேர்ந்த செüந்தரபாண்டியன் மகளான 7 ஆம் வகுப்பு மாணவி புனிதா (13) கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி தாதன்குளம் ரயில் நிலையம் அருகே பாலியல் பலாத்கார முயற்சிக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் ரயில் நிலையம் அருகே முள்புதர் பகுதியில் மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப் பதிந்த செய்துங்கநல்லூர் போலீஸார் மணியாச்சி அருகேயுள்ள பாறைக்குட்டத்தைச் சேர்ந்த சுப்பையாவை கைது செய்தனர்.  இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு வழக்குரைஞராக மாவட்ட குற்றவியல் அரசு வழக்குரைஞரான சந்திரசேகரன் மகளிர் நீதிமன்றத்துக்கு கூடுதல் பொறுப்பை கவனித்து வருகிறார்.

இந்த வழக்கில் தொடர்புடைய 21 சாட்சிகளிடம் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாததால் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பால்துரை முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  சாட்சி விசாரணைக்குப் பிறகு இருதரப்பு வாதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பால்துரை முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களும் வியாழக்கிழமையுடன் முடிவடைந்ததால் வழக்கை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். வாதங்கள் முடிவடைந்துவிட்டதால் அன்றையதினம் தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.