கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவரும், வரக்கால்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளருமான ரா.ஏழுமலை(58). இவர் கடலூர் அருகே உள்ள அழகியநத்தம் பகுதியில் வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர் குறித்த கணக்கெடுப்பு பணியில் இன்று ஈடுபட்டு வந்தார்.
அப்போது அவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரைத் தாக்கியதாகவும் தெரிகிறது. இதில், முகத்தில் காயமடைந்த ஏழுமலை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தூக்கணாம்பாக்கம் போலீஸார் அதேப்பகுதியைச் சேர்ந்த கோ.ஜெயராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனையடுத்து கடலூர், குறிஞ்சிப்பாடி, குமராட்சி ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளச் சேதம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதாக தமிழ்நாடு எம்ஜிஆர் சத்துணவு பணியாளர் பேரவை தெரிவித்துள்ளது.