தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
பண்ருட்டி வட்டம் குடுமியான்குப்பத்தைச் சேர்ந்தவர் சு.ரஜினி(34), கூலித் தொழிலாளி. இவர் வீரபெருமாநல்லூர் அருகே உள்ள செட்டிக்குளத்தி்ல் தனது மாமனார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவாராம். அப்போது, அதேப்பகுதியைச் சேர்ந்த ஆ.ராஜிவ்காந்தி (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், ராஜிவ்காந்தி அவரிடம் அடிக்கடி பணம் வாங்கி மது அருந்தி வந்தாராம்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் செட்டிக்குளம் சென்ற ரஜினியிடம் ராஜிவ்காந்தி மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் வழங்க மறுக்கவே கத்தியால் குத்தியுள்ளார். இதில், காயமடைந்த ரஜினி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரியில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் ஜூன் 15 ஆம் தேதி இறந்தார்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜிவ்காந்தியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் திங்கட்கிழமை நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட ராஜிவ்காந்திக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதனையடுத்து ராஜிவ்காந்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.