பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு சிறுவன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மரப்பாளையம் சீனித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஹேமலதா. இவர்களது மகன் சூர்யா (13). இவன் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனுக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருப்பினும் குணமாகாததால் ஹேமலதா மகன் சூர்யாவை அழைத்துக்கொண்டு கரூர் தாந்தோணிமலை சுங்கவாயில் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
பின்னர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சூர்யாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு வைரஸ் காய்ச்சல் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் காய்ச்சல் சரியாகாததால் சந்தேகத்தின் பேரில் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பியதில் அவருக்கு பன்றிக்காய்ச்சலுக்கு வைரஸ் ஹச்1என்1 இருப்பது உறுதியானது. இதனையடுத்து சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சூர்யாவை வியாழக்கிழமை இரவு அனுமதித்தனர். அங்கு பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கான தனி வார்டில் வைத்து சூர்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த தேவராஜ் (4) என்ற சிறுவன் பன்றிக்காய்ச்சலுக்கான தனி வார்டில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இரண்டாவதாக சூர்யாவும் கரூர் அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டதையடுத்து பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.