/

கம்பத்தில் சிறுத்தை தாக்கி மூன்று நாய்கள் சாவு: விவசாயிகள் பீதி

கம்பம் புதுக்குளம் விவசாயப்பகுதியில் காவலுக்கு இருந்த நாய்கள் சிறுத்தை தாக்கி இறந்ததாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

News image
Updated On :26 மே 2015, 3:47 pm

அறிவழகன்

கம்பம் புதுக்குளம் விவசாயப்பகுதியில் காவலுக்கு இருந்த நாய்கள் சிறுத்தை தாக்கி இறந்ததாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வனச்சாலையில் மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவாரம் பகுதியில் ஏராளமான மானாவாரி மற்றும் தோட்ட விவசாய நிலங்கள் உள்ளன. விவசாயிகள் இப்பகுதியில் மா, சோளம், மற்றும் எள் பயிர் செய்துள்ளனர். இங்குள்ள புதுக்குளம் பகுதியில் கம்பத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் மா மற்றும் எள் பயிர் செய்துள்ளார். தோட்டத்தில் காவலுக்காக கருப்பசாமி நான்கு நாய்களை வளர்த்து வருகிறார்., செவ்வாய்கிழமை இரவு வழக்கம்போல் தோட்டத்துக்கு காவல் சென்ற கருப்பசாமி,  அதிகாலை 5 மணியளவில் வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

பின்னர் காலையில் நாய்களுக்கு உணவு கொடுப்பதற்காக கருப்பசாமி மீண்டும் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த மூன்று நாய்களை காணவில்லை. அவர் தோட்டத்தைச் சுற்றி சென்று நாய்களைத் தேடியபோது, அப்பகுதியில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் ஒரு நாயின் உடல் கிடந்தது. நாய் இறந்து கிடப்பதை பார்த்தால் அதை சிறுத்தை தாக்கி இறந்தது  போல் உள்ளது. அது போல் மற்ற இரண்டு நாய்களையும் காணவில்லை. அதனையும் சிறுத்தை தாக்கி உடல்களை தூக்கிச்சென்றதற்கான அறிகுறி அப்பகுதியில் தெரிந்தது.

சிறுத்தை தாக்கி நாய்கள் செத்தது குறித்த தகவல் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் தீபோல் பரவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கம்பம் வனத்துறை வனவர் பன்னீர் செல்வம், வனக்காவலர் கருப்பசாமி சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த நாயின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் பதிந்துள்ள வனவிலங்கின் கால் தடங்களை சேகரித்தனர்.     வனத்துறையினர் இதுகுறித்து கூறுகையில்:- இப்பகுதியில் உள்ள விவசாயிகளோ, பொதுமக்களோ யாரும் சிறுத்தையை நேரில் பார்க்கவில்லை. தோட்டத்திலுள்ள நாய்களை சிறுத்தை கொன்றதற்கான அறிகுறி தென்படவில்லை. செந்நாய்கள் தாக்கி இருக்கலாம் என நினைக்கிறோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.