/

10 நாள் போராட்டக் கால ஊதியத்தை உடனடியாக வழங்க வழங்க வேண்டும்: இரா.தமிழ்செல்வி

தமிழ்நாடு அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் போராட்ட விளக்கக் கூட்டம் மற்றும் சர்வதேச மகளிர் தின விழா கடலூரில்  நடைபெற்றது.

News image
Updated On :5 மார்ச் 2016, 2:00 pm

முத்துகுமார்

தமிழ்நாடு அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் போராட்ட விளக்கக் கூட்டம் மற்றும் சர்வதேச மகளிர் தின விழா கடலூரில்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் 70-க்கும் மேற்பட்ட துணை சங்கங்கள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சேர்ந்து 10 நாட்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்.19-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா விதி எண்.110-ன் கீழ் எங்களது கோரிக்கையில் 11 கோரிக்கைகளுக்கு அறிவிப்பு வெளியிட்டார். இதில் தற்போது 8 கோரிக்கைகளுக்கு அரசாணை பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஆராய வல்லுநர் குழு அமைத்தல், காலமுறை ஊதியம் பெறுவோர் பிரச்னை, நிர்வாகத் தீர்ப்பாயம் மீண்டும் அமைத்தல் குறித்து அரசாணை வெளியிடப்படவில்லை. இதனை உடனடியாக வெளியிட வேண்டும்.

தற்போது தேர்தல் பணியோடு, மக்கள் பணியையும் செய்து வருகிறோம். மே மாதம் அமையும் புதிய அரசு மக்கள் பிரச்னைகளையும், எங்களது பிரச்னையையும் தீர்க்கும் என்று நம்புகிறோம். நல்ல அரசின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிய வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறோம்.

எங்களது 10 நாள் போராட்டத்தை சட்ட விரோதம் என்றோ, ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றோ அரசு அறிவிக்கவில்லை. எனவே, தற்போது பிடித்தம் செய்து வழங்கப்படும் 10 நாள் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.