பாளையங்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி அருகே பாளையங்கால்வாய் கரையோரம் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தில்லைநாகராஜன் தலைமையில் போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது சடலமாகக் கிடந்தவர் பாளையங்கோட்டை செயின்ட் பால்ஸ் தெருவைச் சேர்ந்த இருதயராஜ் மகன் மைக்கேல் (30) என்பது தெரியவந்தது.
அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்க சென்றபோது அவர்களது வீட்டில் மைக்கேலின் தாயார் பாத்திமா என்ற மேரியும் (52), மாடியில் இருந்த அறையில் இருதயராஜும் (55) கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்ததும் மாநகர காவல் ஆணையர் இரா.திருஞானம் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. நிலம் தொடர்பாக இருதயராஜிக்கும், அவரது சகோதரர் குடும்பத்துக்கும் தகராறு இருந்து வந்ததாம். அதனால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.