தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐ.ஜி.யாக மூன்றாவது முறையாக கே.என்.சத்தியமூர்த்தியை நியமனம் செய்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது குறித்த விவரம்:
தமிழக காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி. பதவி அதிகாரமிக்க பதவியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உளவுத்துறை ஐ.ஜி. தமிழக முதல்வருடன் தினமும் நேரடித் தொடர்பில் இருப்பார் என்பதால், இப் பதவிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
இந்த பதவியில் இருந்து வந்த கே.என். சத்தியமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் முதல் திடீரென நீண்ட விடுப்பில் இருந்தார். இதனால் காவலர் நலப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி உளவுத்துறை ஐ.ஜி. பதவிக்கு நியமிக்கப்பட்டார். சத்தியமூர்த்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் டேவிட்சனும்,அந்தப் பதவியில் இருந்து 10 நாள்களுக்கு பின்னர் மீண்டும் காவலர் நலப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.இதனால் உளவுத்துறை ஐ.ஜி. பொறுப்பை, பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி கூடுதல் பணியாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் உளவுத்துறை ஐ.ஜி. பதவிக்கு கே.என்.சத்தியமூர்த்தி மீண்டும் நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
சத்தியமூர்த்தி உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்படுவது மூன்றாவது முறையாகும். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக சத்தியமூர்த்தி உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தால் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டார்.தேர்தல் முடிவு வெளியான பின்னர்,அதே ஆண்டு மே மாதம் 23-ஆம் தேதி மீண்டும் உளவுத்துறை ஐ.ஜி.யாக அவர் நியமிக்கப்பட்டார்.
நீண்ட விடுமுறையில் இருந்ததினால் கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சத்தியமூர்த்தி, மூன்றாவது முறையாக உளவுத்துறை ஐ.ஜி.யாக மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.