தூத்துக்குடியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 110 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடியில் இருந்து கேரளாவிற்கு காரில் கஞ்சா கடத்துவதாக தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு போலீஸாருக்கு கிடைத்தத் தகவலின் பேரில், போலீஸார் இன்று புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின் போது, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரத்தினகுமார், சாய்குமார் என்ற இரண்டு பேர் வந்த காரை வழிமறித்து போலீஸார் சோதனையிட்டனர். அப்போது காரில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 110 கிலோ கஞ்சா மற்றும் காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதிப்பு ரூ.11 லட்சம். இது குறித்து தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.