இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பாகிஸ்தான் நகரமான குவெட்டா நகர் அருகில் பாச்சாகான் சவுக் பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீரென வெடித்து சிதறியது. இதில், இரண்டு போலீஸார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். ஒரு குழந்தை, இரண்டு பெண்கள் உள்பட 27 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். எனினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதேபோன்று கடந்த செவ்வாய்கிழமை குவெட்டாவில் உள்ள ஒரு கடைக்கு வெளியே வெடிபொருள் கயிறு நிரப்பிய மோட்டார் சைக்கிளில் திடீரென குண்டுவெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையான பலுசிஸ்தான் மாகாணத்தில் தொடரும் வன்முறை முதலீடுகளின் பாதுகாப்பு குறித்த கவலையைத் தூண்டியுள்ளது.