மதுரை: மதுரை நகரில் பொது இடங்களில் குப்பைப் போடுவதை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்று மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் பேசினார்.
தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் மண்டல அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பயிற்சி பட்டறையை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் தொடக்கி வைத்து பேசியது:
மதுரை மாநகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தூய்மை நகருக்கான கணக்கெடுப்பு நடைபெறுகிறது. மதுரை மாநகராட்சியில் மைய திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஒரே இடத்தில் குப்பைகள் கையாளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் பரவலாக்கப்பட்ட நுண் உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
தல்லாகுளம் வார்டு அலுவலகத்தில் காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பதற்கு 2 தொட்டிகள் வைக்கப்பட்டு, காற்றோட்டம் உள்ள முறையில், மிகவும் நுணுக்கமான நுண்உரம் தயாரிக்கப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுகின்றன. இதனால் மக்கும் குப்பையிலிருந்து நுண் உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயம் மற்றும் இதர வேளாண் துறைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெளிச்சந்தையில் ஒரு கிலோ இயற்கை உரம் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. ஆனால், மாநகராட்சியில் தயாரிக்கப்படும் உரம் ஒரு கிலோ ரூ.3 -க்கு மட்டுமே விற்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் குப்பைகள் உருவாகும் இடத்திலேயே உரமாக்குவது தான் மிக முக்கியமான பணியாகும். அதன்படி மாட்டுத்தாவணி காய்கறி அங்காடியில் செயல்படும் நுண் உரம் தயாரிக்கும் கூடம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மதுரை நகரில் குப்பைகளை பிரித்து வாங்குவதற்காக பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்களில் சிலா் அறியாமையால் பொது இடங்களில் குப்பைகளை போடுகின்றனா். இதை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. இப்பயிற்சியை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.