மேற்கு வங்க அரசின் கன்யாஸ்ரீ திட்டத்தின் கீழ் 67 லட்ச பெண்கள் பயனடைந்துள்ளனர் என முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரையில், மேற்கு வங்க அரசின் கன்யாஸ்ரீ திட்டத்தின் மூலம் கடந்த 7 வருடங்களில் 67 லட்ச பெண்கள் பயனடைந்துள்ளனர். பெண்கள் நம் நாட்டின் சொத்துக்கள். அவர்களை பெற்றதற்கு நாம் பெருமை கொள்வோம் என கூறினார்.
‘கன்யஸ்ரீ திட்டம்’ என்பது பெண்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக 18 வயது வரை அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டமாகும்.
இத்திட்டத்தை 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது மேற்கு வங்க அரசு. மம்தா பானர்ஜி அரசு 2017 ஆம் ஆண்டில் தனது கன்யாஸ்ரீ திட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொது சேவைக்காக விருதைப் பெற்றது.
மேலும், நதியா மாவட்டத்தில் கன்யாஸ்ரீ பல்கலைக்கழகம் மற்றும் மாநிலம் முழுவதும் கன்யாஸ்ரீ கல்லூரிகளையும் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.