
எவரையேனும் ஒழித்துக் கட்ட நினைத்தால் பாலியல் அவதூறுக் குற்றச்சாட்டு எழுப்புவது பாஜக தலைவர்களுக்குப் புதிதில்லை: ஹர்திக் பட்டேல்!
குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் அனல் கிளப்பி வரும் நிலையில் பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேலின் மீது பாலியல் அவதூறு குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அவருக்கெதிராகப் செக்ஸ் சிடி ஒன்றை வெளியிட்டுள்ளது பாஜக தரப்பு. இந்த சிடி நேற்று தொலைக்காட்சிகளிலும் கூட வெளியானது. அதில், ஹர்திக், ஹோட்டல் அறை ஒன்றில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் ஹர்திக், தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டுவிட்ட பாஜக, தனது பயத்தைக் குறைக்க இப்படியெல்லாம் கீழ்த்தரமான தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு மாஸ்டர் மைண்ட் பாஜக தேசியத் தலைவரான அமித்ஷா தான். குஜராத்தில் பாஜகவின் அசிங்கமான தோல்வியைத் தவிர்க்க அவர் இப்படியெல்லாம் கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
பட்டேல் சமூக நலனுக்காக துவங்கப்பட்ட அரசியல் கட்சியான PAAS ( Patidar Anamat Andolan Samiti ) தலைவர்களில் ஒருவரான அஸ்வின் பட்டேல் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, ஹர்திக், தனது பெண் தோழி ஒருவருடன் முஸோரிக்குச் சென்று தங்கியிருந்தமைக்குத் தன்னிடம் ஆடியோ பதிவுகள் மற்றும் டெலிஃபோன் அழைப்புப் பதிவுகள் அடங்கிய ஆதாரம் உண்டு எனவும், ஹர்திக்குக்கு 4 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம், அதற்குள் அவர், தன் மீதான குற்றச்சாட்டை இல்லையென நிரூபிக்காவிட்டால், தன்னிடமுள்ள ஆதாரங்களை தான் ஊடகத்தின் முன் வைக்க வேண்டியதாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார். அது மட்டுமல்ல, பட்டேல் இனத்தலைவர்கள், தங்களது அதிகாரத்தை இப்படி முறைகேடாகப் பயன்படுத்துவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.
Image courtesy: spokesman.com