தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டப் பள்ளிகளுக்கு மழையை ஒட்டி இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி தஞ்சமடைந்துள்ளனர். புறநகர்ப் பகுதி மக்களும் மழையினால் பெருத்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளை நகரத்தின் முக்கியப் பகுதிகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலைகளும், பாலங்களும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்படுகின்றனர்.
சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையில் பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி உடைந்து , சுமார் 500 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் வடியத் தாமதமானதால் நேற்று முன் தினம் பெய்த கனமழையின் போதே தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் 2015 ஆண்டின் கனமழை நேரத்தைய அவஸ்தைகளை கடந்த இரண்டு நாள் மழையிலேயே அனுபவிக்கும் சூழல் நிலவியது.
துவக்க கட்ட மழைப்பொழிவுக்கே மழையை எதிர்கொள்ள முடியாமல் சென்னைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தெற்கு கடலோர ஆந்திரா, தமிழகம், புதுவை, கேரளா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Image courtesy: google