சுகம் தரும் சித்த மருத்துவம்: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்-ஏன் தெரியுமா?

முருங்கையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள, வயோதிகப்பருவத்தில் ஏற்படும் ‘மூட்டுவாதம்’ மற்றும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ போன்ற நோய்களை வரவிடாமல் தடுக்க முடியும். 
முருங்கைக்கீரை
முருங்கைக்கீரை

‘வரும் முன் காப்போம்’ என்பது தமிழர்களின் வாழ்வியல் முறை. அதன்படி நோய்களை வரும் முன் காப்பதே சிறந்தது. நோய்கள் வந்த பின் எவ்வளவு மருத்துவ முறைகள் மேற்கொண்டாலும், மருந்து, மாத்திரைகள் உள்கொண்டாலும் அந்த நோயின் அவத்தைகளும், பின் விளைவுகளும் நினைத்தாலே உள்மனத்துக்குள் பலருக்கும் படபடப்பு உண்டாகும். 

“டாக்டர் எங்க அப்பா, அம்மா காலையில் 10 மாத்திரைகள், இரவில் 10 மாத்திரைகள் சாப்பிடறாங்க, மருந்திலே தான் அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்று வருத்தப்படும் சந்ததிகள் ஏராளம். 

உணவே மருந்தாக எண்ணி பாரம்பரிய உணவு முறைகளையும், பழக்கவழக்கத்தையும், மருத்துவ முறைகளையும் பின்பற்றவில்லை என்றால் அவர்களுக்கும் அதே நிலை தான். நான் முடிந்த வரை மாத்திரை, மருந்துகள் எனும் மாற்று உலகத்திற்க்குள் நுழைந்து விடக்கூடாது என்று எண்ணுபவர்கள் நம் தமிழ் மருத்துவ பழமொழிகளை கொஞ்சம் புரட்டி பார்த்தால் அவர்களுக்கு நன்வழி பிறக்கும்.

வயதான காலத்தில் முழங்கால்களில் குருத்தெலும்பு தேய்மானம் ஏற்பட்டு 'ஆஸ்டியோஆர்த்ரைடிஸ்' எனும் மூட்டு வாத நோயினை ஏற்படுத்துவது பலரும் அறிவர். அதோடு கால்சியம் சத்து குறைவினால் ஏற்படும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் நோய் நிலை எலும்புகளை பலவீனப்படுத்தும். இதனால் எலும்பு அடர்த்தி குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு எந்த குறிகுணமும் இல்லாமல் திடீரென்று எலும்பு முறிவினயும் ஏற்படுத்தும். 

இன்றைய நவீன வாழ்வியல் முறையினால், இளம் பருவத்திலே இத்தகைய நோய்நிலை பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது. இந்த இரண்டு நோய்நிலைகளிலும், உடல் எடையினை தாங்கும் முழங்கால் மூட்டு, பலத்தை இழப்பதால் இன்றைய நாளில் ‘வாக்கரை’ தேடுவது வாடிக்கையாகிவிட்டது. நடக்கும் போது நிலைத்தன்மையை கொடுப்பதற்காகவும், பக்கபலமாக இருக்கவும் கண்டறியப்பட்டது தான் ‘வாக்கர்’. 

1950-க்கு பிறகு அமெரிக்காவின் காப்புரிமையை பெற்று வெளிவந்த வாக்கர் காலம் காலமாக வழக்கில் இருந்த நம் நாட்டு பழமொழியை மறக்கடிக்க செய்துள்ளது என்றால் அது மிகையல்ல. வயோதிகப்பருவத்தில் முழங்கால் மூட்டு தேய்மானத்திற்காக கோலையே ஊன்றுகோலாக பயன்படுத்தி வந்த காலம் மாறி வாக்கரை பயன்படுத்தும் காலம் வந்துள்ளது. 

நோய்க்கு தீர்வு வரவில்லையே தவிர, ஊன்றுகோலுக்கு மாற்றுவழி மட்டுமே கிடைத்துள்ளது வருத்தமே. நவீன அறிவியல் எட்டாத வளர்ச்சியை பெற்றவுடன், எட்டும் தூரத்தில் இருக்கும் முருங்கையை பலரும் மறந்தது தான் இதற்கு காரணம். இப்போது பலருக்கும் புரிய வரும் ‘முருங்கையை நட்டவன் எப்படி வெறுங்கையோடு நடப்பான்’ என்று.

முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள, வயோதிகப்பருவத்தில் ஏற்படும் ‘மூட்டுவாதம்’ மற்றும் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ போன்ற நோய்களை வரவிடாமல் தடுக்க முடியும். 

முருங்கை இலையில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற எலும்பு மூட்டுகளின் வன்மைக்கு தேவையான தாது உப்புக்கள் நிறையவே உள்ளன. முக்கியமாக எலும்பு மூட்டுகளின் வன்மைக்கு தேவையான ‘கால்சியம்’ பாலில் உள்ளதை விட, 17 மடங்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அத்தியாவசிய வைட்டமின்களான ஏ, பி, சி இவை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. உடலின் செல்களுக்கு அத்தியாவசியமான கிட்டத்தட்ட 35 மூலக்கூறுகளை (14 மேக்ரோ, 21 மைக்ரோ மூலக்கூறுகள்) கொண்டது இதன் சிறப்பு. அதனால் தான் வெளிநாட்டில் முருங்கையை “இயற்கை தந்த இயற்கை பரிசு” என்ற சிறப்பு பெயரிட்டு வருணிக்கப்படுகின்றனர்.

முருங்கைக் கீரையானது முழங்கால் மூட்டு வாதத்தில் மட்டுமல்லாது, மூட்டுகளை முடக்கும் ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் எனும் முடக்கு வாதத்திலும் சிறந்த பயனளிக்கும். 

இதில் உள்ள 'பீட்டா சிட்டோஸ்டீரால்' எனும் வேதிப்பொருள் மூட்டுகளில் வீக்கத்தை உண்டாக்கும் பல்வேறு காரணிகளான இன்டர்லூகின்-1,6 மற்றும் டிஎன்எஃப்-ஆல்பா போன்றவற்றை தடுத்து, வீக்கத்தை தடுக்கும் தன்மையுடையது. 

மேலும் வலி, வீக்கத்திற்கு காரணமான ப்ரோஸ்டாகிளாண்டின்-இ, காக்ஸ்-2 நொதிகளை செயல்படவிடாமல் தடுக்ககூடியது.  

மேலும் முருங்கை இலையில் மட்டுமல்ல இதன் விதையிலும், காயிலும் சப்போனின்கள், அல்கலாய்டுகள், பினோலிக் வேதிப்பொருள்கள் போன்ற மருத்துவ குணமுள்ள மூலக்கூறுகள் அபரிமிதமாக உள்ளது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மையும், மூட்டுகளின் வீக்கத்தை போக்கும் ஆன்டி-ஆர்த்ரைடிஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மையும், கிருமிக்கொல்லி செய்கையும்  உடையது. இயற்கை ‘வலி நிவாரணி’யாகவும் செயல்படக்கூடியது.  

இலைக்கு வீக்கமுருக்கி செய்கையும் இருப்பதால் அரைத்து வீக்கமான மூட்டுகளில் பற்று போடலாம். முருங்கை இலை மற்றும் ஈர்க்குடன், இஞ்சி, மஞ்சள், மிளகு, பூண்டு, சீரகம், போன்ற மூட்டு வீக்கத்தை குறைக்கும் பிற அஞ்சறை பெட்டி சரக்குகளையும் சேர்த்து  உப்பிட்டு நீர் சேர்த்து சூப் செய்து வாரம் இரண்டு முறை எடுத்துக்கொள்ள இதன் அனைத்து மருத்துவ பலன்களும் கிட்டும். (அல்லது) முருங்கை இலையுடன் கருவேப்பிலை சேர்த்தும் சூப் செய்து குடிக்க இரண்டின் மருத்துவ பலன்களும் கிடைக்கும்.

ஆகவே, முருங்கை என்றால் ஆண்மையை அதிகரிக்கும் என்று ஒரே முத்திரை கொடுத்து அது ஆண்களுக்கு மட்டும் தான் என்று எண்ணாமல், இருபாலரும் முருங்கையை பயன்படுத்த தொடங்கினால் மூட்டுக்களை வன்மையாக்கி, ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தள்ளாடும் வயதில் வாக்கர் இல்லாமல் வெறும் கையோடு நடக்கலாம் என்பது உறுதி.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com