சுகம் தரும் சித்த மருத்துவம்: தாய்மையின் சிறந்த நண்பன் - ‘அதிசய மரம்’  பகுதி- 1

முருங்கையின் மருத்துவ குணங்களுக்கு காரணமான வேதிப்பொருள்கள் நிறையவே இருப்பினும், உடலின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமாக உள்ள தாது உப்புக்களும், விட்டமின்களும் இன்னும் அதிகமாகவே உள்ளது. 
சுகம் தரும் சித்த மருத்துவம்: தாய்மையின் சிறந்த நண்பன் - ‘அதிசய மரம்’  பகுதி- 1

எதையும் வெளிநாட்டினர் சொன்னால் தான் ஏற்றுக்கொள்ளும், வெளிநாட்டு மோகம் நம்நாட்டு மக்களிடம் அதிகமாகி விட்டது. காலம் காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய, பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போய்விட்டது. 

ஆம் அன்றாடம் பார்க்கும் பல விளம்பரங்களில் கூட வெளிநாட்டு மருத்துவர்கள் சொல்வது போல தான் வருகிறது. வீடுதோறும் நாம் வளர்த்து வரும் மூலிகைகள் பல. அவற்றிற்கு இவ்வளவு மருத்துவ குணங்கள் என்று சொன்னால் ஏற்பதை விட, அறிவியல் பூர்வமாகவும், ஆதாரத்தோடும், வரலாற்று நிகழ்வுகளோடும் சொன்னால் தான் பலரும் உடனே ஏற்றுக்கொள்கின்றனர். 

அதன் அடிப்படையில் அதிசய மரம் (மிராகள் ட்ரீ) என்று வெளிநாட்டினர் போற்றும் மரம் எது தெரியுமா? இன்னும் ஒருபடி மேலே சென்று, அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று நிகழ்வு சொல்லட்டுமா?

உலக வரலாற்றில் ஒரு முக்கிய நாயகன், கியூபா புரட்சியின் தலைவன் என்று நாம் அனைவரும் அறிந்த பிடரல் காஸ்ட்ரோ எனும் மாமனிதன் அதிகம் கொண்டாடிய, நேசித்த மூலிகை இந்த 'அதிசய மரம்'. 

அந்நாட்டில் சீனா- கியூபா அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஒப்பந்தமிட்டு அதிக மரக்கன்றுகளை நட வைத்து, அந்நாட்டு மக்கள் அனைவரையும் பயன்படுத்த செய்து, அதன் மருத்துவ பலனை நாடெங்கும் அனுபவிக்க, ஆரோக்கியத்தை அறுவடை செய்யும்  வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தார் என்பது வரலாற்று நிகழ்வு. அந்த அளவுக்கு மருத்துவ குணம் வாய்ந்த, சித்த மருத்துவம் சொல்லும், மிராகள் ட்ரீ எது தெரியுமா? நம்ம ஊர் 'முருங்கை மரம்' தான்.

என்னடா இது? நம்ம ஊரில் கேட்பாரற்று கிடக்கும் முருங்கைகீரைக்கு இவ்வளவு மகத்துவமா? என்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இதன் மருத்துவ குணங்கள். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மிகுந்த போஷாக்கு அளிக்கும் மூலிகை. இதன் இலை, பட்டை, வேர் போன்ற அத்தனை பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தது. இந்த அதிசய மரம் முருங்கை மரத்தை பற்றி சித்த மருத்துவம் சொல்வது என்ன?

முருங்கைப்பூவின் பயன் காலம் காலமாக நாம் அறிந்ததே. முருங்கைப்பூ ஆண்மலடை போக்கும் அற்புத மூலிகை. ‘அழி விந்தும் புஷ்டியாகும்’ என்று இதை அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. 

வாரம் ஓரிரு நாள் அதனை உணவில் பொரியலாக்கி உண்டாலே நல்ல பலனை தரும். நாம் அதிகம் பயன்படுத்தும் முருங்கைகாயினால் “சொல்லும் பிணியெல்லாம் தோல்வியாம்” என்று அகத்தியர் குணவாகடத்தில் சொல்லப்பட்டுள்ளது, முருங்கைக்கே உண்டான தனிச்சிறப்பு. 

அதாவது நாம் என்ன என்ன பிணியால் எல்லாம் வருந்துகிறோமோ? அவை எல்லாவற்றிற்கும் இதுவே மருந்தாகும் என்ற பொருளாகும். மேலும் இதன் இலையால் “மந்தம் வெப்பம் தெறிக்கும் தலைநோய் வெறி மூர்ச்சை கண்ணோய் விலகும்” என்றும் சொல்லப்பட்டுள்ளது.

முருங்கையின் மருத்துவ குணங்களுக்கு காரணமான வேதிப்பொருள்கள் நிறையவே இருப்பினும், உடலின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமாக உள்ள தாது உப்புக்களும், விட்டமின்களும் இன்னும் அதிகமாகவே உள்ளது. 

முருங்கையில், ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் ‘சி’ தான் உடலின் நோய் எதிர்ப்புசக்திக்கு ஆதாரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. 

மேலும் கண் பார்வைக்கு அவசியமான வைட்டமின் ஏ, கேரட்டில் உள்ளது போல் 10  மடங்கும், உடல் எலும்பு வன்மைக்கு தேவையான ‘கால்சியம்’ பாலில் உள்ளதை விட  17 மடங்கும், உடல் வளர்ச்சிக்கு தேவையான ‘புரதம்’ தயிரில் உள்ளதை விட 9 மடங்கும், ரத்த சோகையை போக்கும் ‘இரும்பு சத்து’ கீரையில் உள்ளதை விட 25 மடங்கும், இருதயத்தை காக்கும் ‘பொட்டாசியம் சத்து’ வாழைப்பழத்தில் உள்ளதை விட 15 மடங்கும் உள்ளதாக உலகின் முன்னணி ஆராய்ச்சி இதழ்கள் கூறுகின்றது. இப்போது புரியும் “சொல்லும் பிணியெல்லாம் தோல்வியாம்”என்ற சித்த மருத்துவக் கூற்று உண்மை தான் என்று.

அதெல்லாம் ஒருபுறம் இருக்க, தாய்மையின் சிறந்த நண்பன் இந்த அதிசய மரம் என்ற சொல்லக்காரணம் என்னவெனில், மகளிரின் முக்கிய பருவமான தாய்மைப் பருவத்தில், பிறந்த மகவுக்கு அமுதம் தாய்ப்பால் தான். அதுவே 6-மாதம் வரைக்கும் பிள்ளைகளை வளர்க்க போதுமான உணவும் கூட. அத்தகைய சிறப்பு மிக்க தாய்ப்பால், சரிவர சுரப்பில்லாமல் இருந்து வருத்தப்படும் தாய்மார்களுக்கு இந்த முருங்கைகீரை ஒன்றே பெரிய வரப்பிரசாதம். 

முருங்கை கீரையானது மகவுக்கு அமிர்தமாகிய தாய்ப்பால் சுரப்பினை பெருக்குவதால் தான் இப்பெயர் வந்துள்ளது. 

தாய்ப்பாலினை இயற்கையாக சுரக்கும் தன்மையுள்ள ‘தாவர ஸ்டீரால்கள்’ முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. இதன் இலையில் உள்ள ஸ்டிக்மாஸ்டீரால், சிட்டோஸ்டீரால், கம்ப்ஸ்டீரால் போன்ற வேதிப்பொருள்கள் பெண் ஹார்மோன் எனப்படும் ‘ஈஸ்ட்ரோஜென்’ சுரப்பினை அதிகமாக்கி, பால் சுரக்கும் குழாய்களின் பெருக்கத்தை அதிகரிக்க செய்து பால் சுரப்பினை அதிகமாக்கும். கர்ப்ப காலத்தில் தினசரி சுமார் 6 ஸ்பூன் இலை தூள் எடுத்துக்கொள்ள தினசரி இரும்பு மற்றும் கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.     

இவ்வளவு மருத்துவ மகத்துவம் வாய்ந்த முருங்கை கீரையும், காயும் வேறு என்ன நோய்களுக்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது?  எவ்வாறு பயன்படுத்தலாம்? ‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு நடப்பான்’ என்ற பழமொழிக்கு காரணம் என்ன? தொடர்ந்து அடுத்த கட்டுரையில்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com