இரவில் உறக்கம் வராமல் தவிப்பது என்பது சிலருக்கு வேதனையாகவும் பலருக்கு பல நோய்களை அழையா விருந்தாளியாக்கும் கருவியாகவும் மாறிவிடுகிறது.
இரவில் உறக்கம் வராமல் போவதற்கு பல காரணிகள் இருக்கலாம். ஆனால், சிலருக்கு சின்ன சின்ன விஷயங்களை மாற்றினாலே நல்ல உறக்கம் ஏற்படும்.
அந்த வகையில், இரவில் உறக்கம் வராமல் தவிர்ப்பவர்கள், உறங்கச் செல்லும் முன், வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சிறு குளியல் போட்டால், நிம்மதியான உறக்கம் வரும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
மிகவும் குளிரான அல்லது சூடான தண்ணீராக அல்லாமல், லேசான வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்ததும் ஒரு அமைதியான சூழல் ஏற்படும். இது மனதையும் லேசாக்கி அதன் மூலம் உறக்கம் வருவதற்கு வழி பிறக்குமாம்.
சிலருக்கு உடல்நலப் பிரச்னைகள் அல்லது எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளால் உறக்கம் கெடலாம். அதுபோன்றவர்கள் உடல்நலப் பிரச்னையை சரி செய்வது அல்லது மாத்திரைகளுக்கு மாற்றுத் தேடுவது நலம்.
உறங்கச் செல்லும் முன் ஒரு மணி நேரம் செல்போன், டிவி போன்றவற்றைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். அதுபோல ஒரே நேரத்தில் உறங்கச் சென்று ஒரே நேரத்தில் எழுவதும், பகலில் கும்பகர்ணனைப் போல பல மணி நேரம் தூங்குவதையும் தவிர்த்தால் இரவில் உறக்கம் வரலாம் என்கிறார்கள் உடல்நல நிபுணர்கள்.