மயிலத்தில் 500 மி.மீ மழைப்பொழிவு... 3 மணி நேரமாக நகராமல் நிற்கும் புயல்!

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 500 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மயிலத்தில் 500 மி.மீ மழைப்பொழிவு... 3 மணி நேரமாக நகராமல் நிற்கும் புயல்!
Published on
Updated on
1 min read

ஃபென்ஜால் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பின்னரும் கடந்த 3 மணி நேரமாக நகராமல் உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய எக்ஸ் தளத்தில் பாலச்சந்திரன் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் நள்ளிரவு 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், ஃபென்ஜால் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் புதுவை அருகே நிலைகொண்டுள்ளது.

இந்த புயல் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறையக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 3 இடங்களில் அதி கனமழையும் பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 500 மி.மீ மழை பதிவாகியுள்ளது. புதுவையில் 460 மி.மீ மழை பதிவாகியுள்ளது. புதுவையில் கடந்த 2004 அக்டோபரில் 210 மி.மீ மழை பதிவான நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிகபட்சமாக மழை பெய்துள்ளது.

கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல்

வங்கக் கடலில் கடந்த நவ. 24-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவ.27-இல் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது ஃபென்ஜால் புயலாக வெள்ளிக்கிழமை மாறியது.

சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் நள்ளிரவு 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள் புதுவை அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com