98 கங்காருகளைக் கொன்ற நபர் கைது!

ஆஸ்திரேலியாவில் 98 கங்காருகளைக் கொன்ற நபர் கைதுசெய்யப்பட்டதைப் பற்றி...
கோப்புப்படம்
கோப்புப்படம்dinmani online
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் 98 கங்காருகளைக் கொன்ற 43 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள சிங்கள்டன் எனும் ஊரிலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 98 கங்காருகள் கொல்லப்பட்டு கிடந்தன.

இதனையடுத்து, விசாரணை மேற்கொண்டு வந்த ஆஸ்திரேலிய காவல்துறையினர் சிங்கள்டனிலிருந்து 70 கி.மீ தொலைவிலுள்ள வில்லியம்டவுன் எனும் ஊரில் சோதனை நடத்தினார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை (டிச.20) நடத்தப்பட்ட அந்த சோதனையின்போது, 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் வீட்டிலிருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் மீது விலங்குகளுக்கு தீங்கு விளைவித்தது, அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆயுதங்களை உபயோகித்தது, பாதுகாக்கப்பட்ட விலங்கை வேட்டையாடியது உள்ளிட்ட ஆறு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு நீதிமன்றம், அடுத்தாண்டு (2025) ஜனவரி 13 அன்று ரேமண்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனக் கூறி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய விலங்கான கங்காரு, அந்நாட்டின் பாதுகாக்கப்பட்ட விலங்குகளில் ஒன்று. அதன் இறைச்சியை உண்ண அந்நாட்டு அரசு அனுமதித்தாலும், அந்த விலங்கை வேட்டையாட சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட விலங்கினங்களுக்கு தீங்கு விளைவித்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X