திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(55). இவர் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் காங்கயம் நகரம், கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்பாகச் சென்ற ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக, வண்டியைத் திருப்பி உள்ளார்.
அப்போது எதிர்த் திசையில் வந்த காங்கயம் அருகே, காடையூரில் உள்ள தனியார் பள்ளி வேன் மணிவண்ணன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிவண்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
பள்ளி வேனுக்குள் உட்கார்ந்து இருந்த 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக அவர்கள் வேறு வாகனம் மூலம் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.