தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் பேசுகையில்,
"தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் ஒடிஸா மாநிலங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படும்.
தமிழ்நாட்டின் தொல் மரபுகளை ஆய்வு செய்ய காமராஜர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கீழடி உள்ளிட்ட மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடியில் ரூ.17 கோடி மதிப்பில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும். நாட்டிலேயே அகழாய்வுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.