என்னை காண ஆதாருடன் வரவும்: கங்கனா ரணாவத் உத்தரவால் சர்ச்சை
‘என்னை சந்திக்க வருவோர் ஆதார் கொண்டு வாருங்கள்’ என பாஜக எம்.பி., கங்கனா ரணாவத் தெரிவித்திருப்பது அரசியல் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
பாலிவுட் நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத், மண்டியில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், இமாச்சலப் பிரதேசத்தின் தனது மண்டி நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்தவர்கள் தன்னைச் சந்திக்க வரும்போது ஆதார் அட்டையைக் கொண்டு வருமாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தன்னை சந்திக்க விரும்புபவர்கள் சந்திப்பின் நோக்கத்தை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு வருமாறு ‘ரணாவத்’ கோரியுள்ளார்.
தனது அலுவலகத்திற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியாட்கள் அதிக அளவில் வருவதால், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்துவதாகவும், தனது தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் தான் சந்திக்க விரும்பவில்லை. தன்னை சந்திக்க வருவோர் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக, தொகுதி தொடர்பான தேவைகள் மற்றும் சந்திப்பின் நோக்கத்தை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு வர வேண்டும்" என்று ரணாவத் கூறினார்.
வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய கங்கனா ரணாவத், உள்ளூர் பஞ்சாயத்து அல்லது தொகுதி விஷயங்களைக் காட்டிலும் தேசிய அளவிலான பிரச்னைகளைத் தீர்ப்பதே நாடாளுமன்ற உறுப்பினராக தனது பங்கு என்று ரணாவத் கூறினார்.
இந்த நிலையில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தனது தொகுதி பிரச்னைகளை மட்டுமே தன்னிடம் கொண்டு வருமாறு மக்களை வலியுறுத்தியிருப்பது அரசியல் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு
கங்கனா ரணாவத் பேச்சு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங், “ஒரு பொதுப் பிரதிநிதி தனது நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மக்கள் தன்னைச் சந்திக்க விரும்பினால், ஆதார் அட்டையைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்பது ஏற்புடையதல்ல” என்று சிங் கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலில் மண்டியில் இருந்து முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங்கைத் தோற்கடித்தார் கங்கனா ரணாவத். சிங் காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கங்கனா ரணாவத், சண்டிகர் விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் காவலர் ஒருவர் அறைந்தது கடந்த மாதம் தலைப்புச் செய்தியாக இருந்தது. இந்த மாதம் தொடக்கத்தில், ரணாவத்தை அறைந்ததாகக் கூறப்படும் சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் இப்போது பெங்களூரு விமான நிலையத்தில் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.