
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாராயணசாமி, ராமு, சுப்ரமணி, ஆனந்த், ராஜேந்திரன் ,மனோஜ் குமார், ஆனந்தன், விஜயன்,ரவி, ராஜேந்திரன், ராஜேந்திரன், நாக பிள்ளை, பாலு, ராஜேந்திரன், வீரமுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் என 15 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதையடுத்து கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 31 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி என பல்வேறு மருத்துவமனைகளில் 114 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவே மருத்துவமனை தகவல்கள் தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.
மேலும் சிறப்பு மருத்துவக்குழுவினர் மற்றும் செவிலியர்கள் குழு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுவரை 29 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கிற்குத் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக 29 பேருக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.