பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது சீசன் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். விராட் கோலி, டூ பிளெஸ்ஸிஸ் அணியின் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டூ பிளெஸ்ஸிஸ் 35 ரன்களுக்கு வெளியேறினார். இந்த நிலையில் மிடில் ஆர்டரில் களம்கண்ட ரஜத் படிதார், மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். இதனால் ஆர்சிபி அணி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அடுத்து வந்த கேமரூன் கிரீன் 18 ரன்களுக்கு ஏமாற்றமளிக்க அனுஜ் ராவத் களம்கண்டார்.
அவர், தினேஷ் கார்த்தியுடன் இணைந்து இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். துஷார் தேஷ்பாண்டே வீசிய 18ஆவது ஓவரில் அனுஜ் ராவத் 3 சிக்கர்களை பறக்கவிட்டார். அந்த ஓவரில் மட்டும் ஆர்சிபி அணிக்கு 25 ரன்கள் கிடைத்தது. இதனால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதையடுத்து அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அனுஜ் ராவத் 48 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். ஒருகட்டத்தில் ஆர்சிபி அணி 150 ரன்களை கடக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடையில் வந்த அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 57 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.