ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம்: முத்தரசன்

கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் அலட்சியமே காரணம்
இந்திய கம்யூ. மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.
இந்திய கம்யூ. மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.
Published on
Updated on
1 min read

கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் அலட்சியமே காணம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (அக்.11) இரவு சென்னை பெரம்பூர் வழியாக பிகார் மாநிலம் செல்லும் பாக்மதி அதி விரைவு தொடர் வண்டி, கவரப்பேட்டை அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி, அதன் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்ற தகவல் கிடைத்த போதிலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதைகளில் தடம் மாற்றி விடப்பட்டதாலும் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மத்திய அரசு அலட்சியம்

ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. நாட்டின் மிகப்பெரும் போக்குவரத்து பொதுத் துறையான ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வந்த முறையை மாற்றி, பொது வரவு - செலவு திட்டத்தில் சேர்த்து விட்டது, இதனால் அதன் மீது தனித்த கவனம் செலுத்தும் வாய்ப்பை பறித்து விட்டது.

638 விபத்து, 800 பயணிகள் பலி

மத்திய பாஜக அரசின் ரயில்வே துறை அமைச்சர் விபத்துக்கள் குறைந்து வருவதாக கூறுவதை, கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 638 விபத்துக்களில் சுமார் 800 பயணிகள் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ள விபரத்தை தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல் மறுக்கிறது.

ரயில்வே நிர்வாகத்தில் பணியாளர்களை பெருமளவு குறைத்து, நவீன தொழில்நுட்பங்களை மட்டும் நம்பி நிற்பது விபத்துக்களை தடுக்க உதவவில்லை என்பதை மத்திய அரசு உணர வேண்டும். இது தொடர்பாக உயர்மட்டக் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுத்த முன் வர வேண்டும்.

சேவை வழங்குவதிலும் படுமோசம்

ஒரே முறையில் இயக்கப்படும் ரயில்களை விரைவு வண்டி, அதிவிரைவு வண்டி, சிறப்பு வண்டி என பல பெயர்களிலும், தட்கால், பிரிமியம் என்ற பெயர்களிலும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருப்பதும், முன்பதிவு பயணச்சீட்டுகளை ரத்து செய்வதிலும், நடைமேடை கட்டணங்களிலும் பயணிகள் தலையில் பெரும் சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் பயண பாதுகாப்பு உட்பட அனைத்து சேவை வழங்குவதிலும் படுமோசமான நிலையே நீடிக்கிறது.

இந்த நிலையில், ரயில்வே சேவையை தனியாரிடம் வழங்கி, அரசு விலகிக் கொள்ள முயற்சிப்பது மக்கள் விரோத செயலாகும்.

ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்து, சேவைகளை மேம்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதை கைவிட்டு, மத்திய பாஜக அரசும், ரயில்வே அமைச்சகமும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com