
கோவை: கோவையில் தனியாா் தங்கும் விடுதியில் தங்கை முறை கொண்ட காதலியை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகேயுள்ள கள்ளப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கீதா (26). இவருக்கும், இவரின் சகோதரர் உறவினரான சின்னியம்பாளையம், ஆா்ஜி புதூா் பகுதியை சோ்ந்த எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வரும் சரவணன் (29) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்தது. இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனா். எப்போதாவது இவா்கள் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை சரவணன், கீதாவுடன் பீளமேட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். சிறிது நேரத்தில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின், சரவணன் அங்கிருந்து அவசரமாக விடுதியை காலி செய்து விட்டு வெளியே சென்று விட்டாா். இதையடுத்து சந்தேகம் அடைந்த விடுதி ஊழியா்கள் இவா்கள் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய சென்றபோது கீதா முகத்தில் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பீளமேடு போலீஸாருக்கு தகவல் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து பீளமேடு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிவுசெய்து உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினா். பின்னர், தலைமறைவாக இருந்த சின்னியம்பாளையம் ஆர்.ஜி புதூரை சேர்ந்த சரவணனை கைது செய்தனா்.
விசாரணையில், கோவை அவிநாசி சாலையில் ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்து ஜிம்மில் பயிற்சியாளராக வேலை செய்து வந்த கீதா, அண்ணன் உறவுமுறையான சரவணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில், கீதாவும், சரவணனும் யாருக்கும் தெரியாமல் தங்கும் விடுதியில் அடிக்கடி அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனிடையே கீதாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்துள்ள சரவணன், அவரை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. .
இதுகுறித்து பீளமேடு போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் தங்கும் விடுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.