
புதுதில்லி: தட்கல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என்று ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.
அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள், தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை இந்திய ரயில்வேவில் உள்ளது.
இந்தப் பயணச்சீட்டை ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் நேரடியாகவும், ஐஆர்சிடிசி வலைதளம் அல்லது செல்போன் செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும்.
குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத படுக்கை மற்றும் உட்கார்ந்து செல்வதற்கான வகுப்புகளுக்கு காலை 11 மணி மணிக்கும் ஆன்லைனில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குகிறது. கட்டணம் அதிகம் என்றாலும் இந்த பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் பயணம் செய்வதற்கு 24 மணி நேரம் முன்பாக பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த நிலையில், தட்கல் பயணச்சீட்டு மற்றும் பிரிமியர் தட்கலுக்கான முன்பதிவு நேரம் மாற்றப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து தட்கல் பயணச்சீட்டு மற்றும் பிரிமியம் தட்கலுக்கான முன்பதிவு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என்று ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து ஐஆர்சிடிசி எக்ஸ் வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
தட்கல் பயணச்சீட்டு மற்றும் பிரிமியம் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவுகளுக்கான வெவ்வேறு நேரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.
குளிர்சாதன வசதி அல்லது குளிர்சாதன வசதி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் அல்லது பிரிமியம் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு நேரங்களில் தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மேலும் முகவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முன்பதிவு நேரங்களும் மாற்றப்படவில்லை என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.